சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ல் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கடந்த 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய இருந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, இந்த வழக்கின் விசாரணையை தொடங்க கூடாது என்று கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான எந்த காரணமும் இல்லாததால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து விசாரணையை ஜனவரி 31க்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார். இதை தொடர்ந்து நாளை வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.