ஆக்கிரமிப்பு நிலத்தில் பரோட்டா கடை கலைஞர் நூலகத்திற்கு ரூ.5,000 செலுத்த உத்தரவு

மதுரை: ஆக்கிரமிப்பு நிலத்தில் பரோட்டா கடை நடத்தியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, அதை கலைஞர் நூலகத்திற்கு வங்கி கணக்கில் செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா வீரசிங்கமணியைச் சேர்ந்த மாரியப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆக்கிரமிப்பு நிலத்தில் பரோட்டா கடை நடத்தி வருவதாகவும், கட்டிடம் கட்டி வருவதாகவும் கூறி வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். எனது ஆட்சேபத்தை பரிசீலிக்காமல் என்னை வெளியேற்றுவதற்கு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘மனுதாரர் அரசு பொதுச்சொத்தை ஆக்கிரமித்து பரோட்டா கடை நடத்துவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சொத்திற்கு உரிமை கொண்டாட முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்காக மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை மதுரையிலுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கிடும் வகையில் செலுத்த வேண்டும். அபராத தொகைகளை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு செலுத்திடும் வகையில் புதிய வங்கி கணக்கு ஒன்றை பதிவாளர் தரப்பில் துவக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்