சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என்று ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ராமதாஸ்(பாமக நிறுவனர்): அண்மைக் காலங்களில் பட்டாசு ஆலைகள் மற்றும் வெடி ஆலைகளில் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): சிவகாசி அடுத்த ரெங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்து செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.பட்டாசு ஆலைகள் அரசின் கோட்பாடுகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பட்டாசு ஆலையில் பயிற்சி பெற்ற, அனுபவம் வாய்ந்தவர்களை மட்டுமே வேலையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆலைகளை அரசு உடனடியாக ஆய்வு செய்து அவற்றை முறைப்படுத்த வேண்டும். அவற்றை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.