பந்தலூர்: பந்தலூர் அருகே 2 யானைகள் வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கிருந்த மரங்கள், கார்களை உடைத்து சேதப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே தேவாலா வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டியாளம் குடியிருப்பு பகுதியில் புகுந்த 2 காட்டு யானைகள் ஜானகி என்பவரின் வீட்டில் இருந்த பாக்கு மரத்தையும், 2 கார்களையும் உடைத்து சேதப்படுத்தியது.
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென யானைகள் வனத்துறையினரை துரத்தியது. இதனால் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்பகுதியில் பல மணி நேரம் முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது. இதையடுத்து வனத்துறையினர் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து கூச்சல் போட்டும், சத்தம் எழுப்பியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
உணவு தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். யானைகளிடமிருந்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.