தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை 3063 ஆக உயர்வு: யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

சென்னை: ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த மே மாதம் 23ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் உள்ள 26 வன பிரிவுகளில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 1,836 வனத்துறை ஊழியர்கள் மற்றும் 342 தன்னார்வலர்கள், என மொத்தம் 2,178 நபர்கள் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில், சேகரிக்கப்பட்ட தகவல்கள் முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, 26 வனப் பிரிவுகளில் யானைகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பானது யானைகளின் எண்ணிக்கை, பாலின விகிதம், யானைகளின் இயக்கவியல் மற்றும் யானைகளின் வாழ்விடத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்கு யானைகள் பயன்பாட்டின் பரப்பளவு பற்றிய தெளிவான விவரங்களை வழங்கும். தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவிடும் 2024ம் ஆண்டிற்கான ‘ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை’-யை தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கடந்த 2017 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து யானைகளின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை2023-ன் படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது.

தற்போது அதன் தொடர்ச்சியாக, 2024 ஆம் ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள், குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகத்திய மலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணமாக விளங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

* யானைகள் எண்ணிக்கை
2017: 2,761
2023: 2,961
2024: 3,063

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்