காரமடை: கோவை, காரமடை அடுத்த தாயனூர், தெற்குத்தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (37). விவசாயி. இவரது மனைவி நந்தினி (31). 2 குழந்தைகள் உள்ளனர். மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவார பகுதியில் உள்ள இவரது தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்தது. இதனை அறிந்த தம்பதி, யானையை விரட்ட பட்டாசை பற்ற வைத்தனர். 3 மீட்டர் நீளமுள்ள திரியை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்து சிதறியது. இதில், பழனிச்சாமியின் வலது கை சிதைந்தது. நந்தினிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. காரமடை போலீசார் தம்பதியை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துமவனைக்கு மாற்றப்பட்டனர்.
யானையை விரட்டியவர் தேள் கடித்து பலி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, தட்டாம்பாறையை சேர்ந்தவர் சுரேஷ் (36). விவசாயி. இவரது மனைவி ஷில்பா (30). 2 குழந்தைகள் உள்ளனர். சுரேசின் விவசாய தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்தது. நண்பர்களுடன் சென்று யானையை வனத்துக்குள் விரட்டினார். அப்போது சுரேஷை ஏதோ கடித்துள்ளது. பூச்சியாக இருக்கும் என்று பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. வீட்டிற்கு சென்றபிறகு வலியால் துடித்தவரை கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போதுதான் அவரை தேள் கடித்து விஷம் உடல் முழுவதும் பரவியது தெரிந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் நேற்று இறந்தார்.