புதுடெல்லி: மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனமான பெல் நிறுவனத்தின் வாரிய குழுவில் இருந்து பாஜ கட்சியை சேர்ந்த இயக்குநரகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு முன்னாள் செயலாளரான ஈ.ஏ.எஸ். சர்மா தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘பெல் நிறுவன வாரிய குழுவில் கட்சி சார்ந்த இயக்குநர்கள் நீக்கப்படுவதை உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும். இந்த விஷயம் முழு தேசத்திற்கும் கவலை அளிக்கும் விஷயமாகும்’ என வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மின்னணு இயந்திரங்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் வாரிய குழுவில் தனிப்பட்ட இயக்குநர்களாக பாஜ கட்சியை சேர்ந்த மற்றும் பாஜவால் நியமிக்கப்பட்டவர்கள் என 4 பேர் உள்ளனர். நிறுவனத்தின் நிர்வாக விவகாரத்தில் தனிப்பட்ட இயக்குநர்கள் முக்கிய பங்கு வகிப்பவர்கள். இந்த பொறுப்புகளில் கட்சி சார்ந்தவர்கள் இருந்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பானதாக இருக்க முடியும்? சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடக்குமா? தேர்தலின் புனிதத்தை யார் பாதுகாப்பார்கள்? இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ஏன் அமைதியாக இருக்கிறது? பேசுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.