தாம்பரம்: தாம்பரம் அடுத்த கண்டிகை பகுதியை சேர்ந்த கிரிஜா (36), நேற்று முன்தினம் தனது 6வயது மகன் ஜீவாவுடன் செங்கல்பட்டு செல்வதற்காக பெருங்களத்தூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் நின்றுள்ளது. இதில் கிரிஜா, மகனை முதலில் ஏற்றிவிட்டு, கிரிஜாவும் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார். ஆனால் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்ததால், கிரிஜா ரயிலில் ஏறுவதற்குள் ரயில் புறப்பட்டது. இதனால், மகன் மட்டும் ரயிலில் சென்றதால், அதிர்ச்சியடைந்த கிரிஜா என்ன செய்வது என்று தெரியாமல் ரயில் நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த முருகலிங்கம், சம்பந்தப்பட்ட மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் பிரசாத் அதன்பேரில் காவலர் பிரசாத், உடனடியாக சிறுவன் ஜீவாவை பத்திரமாக மீட்டு வண்டலூர் ரயில் நிலையத்தில் இறக்கி, பின்னர் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் ஏறி பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கு சிறுவனை அழைத்து வந்து, அவரது தாய் கிரிஜாவிடம் ஒப்படைத்தார். தனது மகனை பார்த்தவுடன் கிரிஜா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.