சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே இன்று (28.07.2024) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
அதே நேரம் இன்று காலை 7.45 மணி முதல் இரவு 7.45 வரையில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் அனைத்து மின்சார ரயில்களும் அதற்கு மாற்றாக சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும். அதேபோல, செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தாம்பரம் பராமரிப்பு பணிக்காக பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் இடையே இரவு 7.45 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்த பின்னர் வழக்கம்போல சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, இன்று மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.