மும்பை: தனியார் நடத்தும் பெரிய தொழிற்சாலைகளில் மின்சார தேவைகளுக்காக சிறு அனல் மின் நிலையங்களை இயக்குகின்றன. இந்நிலையில், இந்த அனல் மின்நிலையங்களுக்கு பதிலாக சிறிய அணு மின்நிலையங்களை அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது பற்றி இந்திய அணுசக்தி கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரிய தொழிற்சாலைகளின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 220 மெகாவாட் திறன் கொண்ட சிறிய அணுமின் நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்காக தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த திட்டத்துக்காக நிதி, நிலம் இரண்டையும் தனியார் நிறுவனம் தர வேண்டும். அப்படி செய்தால், அணு உலையை நிறுவி அதை இயக்கும் பொறுப்பையும் இந்திய அணுசக்தி கழகம் கவனித்துக் கொள்ளும். வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் சிறிய அணு உலையை உருவாக்க ஒரு மெகாவாட்டிற்கு சுமார் ரூ.100 கோடியாக இருக்கும். ஆனால், இந்திய தொழில்நுட்பத்தில் ஒரு மெகாவாட்டிற்கு ரூ.16 கோடி தான் ஆகும் என்றார்.