சென்னை: குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் புதிய வசதியை மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்கனவே இணையதளம் மற்றும் செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் வாரியத்திலிருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே யுபிஐ, இணைய வங்கி வாயிலாக இன்னும் எளிதாக மின் கட்டணம் செலுத்தலாம்.
அதன்படி மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி மொபைல் எண்ணுக்கு வரும். அந்த குறுஞ்செய்தியில் இருக்கும் இணைப்பை பயன்படுத்தியே கட்டணத்தை செலுத்தலாம். குறுஞ்செய்திகள் உள்ள இணைப்பை முதலில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அதன் அருகில் உள்ள பெட்டியில் உள்ள கேப்சாவை உள்ளிட வேண்டும். இதனையடுத்து கட்டணம் செலுத்தும் செயல் முறை தொடங்கும். அதில் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்து, அதன் பின்னர் மின் கட்டணத்தை செலுத்தி விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.