Sunday, June 30, 2024
Home » 5 மாநிலங்களில் தேர்தல் ஆட்சியை பிடிப்பது யார்?

5 மாநிலங்களில் தேர்தல் ஆட்சியை பிடிப்பது யார்?

by Arun Kumar

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நாளை தொடங்கி 30ம் தேதியுடன் முடிவடைகிறது. மிசோரமில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும், சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதியில் முதற்கட்டமாக 20 தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்துள்ளது. 5 மாநிலத்திலும் வரும் டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த 5 மாநில தேர்தல், அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதி போட்டி என்பதால், ஆளும் பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிரமாக களமிறங்கி உள்ளன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய இறுதிகட்ட கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. வாக்களிக்கும் முன்பாக கடைசி கட்ட நேரத்தில் மக்களின் மனநிலை குறித்து ஏபிபி மற்றும் சி-வோட்டர் நிறுவனங்களின் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி மிசோரமில் மொத்தமுள்ள 40 இடங்களில் ஆளும் எம்என்எப் 17 முதல் 21 இடங்களிலும், காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களிலும், இசட்பிஎம் 10 முதல் 14 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெல்லும். முதல்வர் சோரம்தாங்கா ஆட்சி மீது மிசோரம் மக்கள் அதிருப்தியில் இருந்தாலும், 34.7 சதவீத வாக்குகளுடன் ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 45 முதல் 51 இடங்களிலும், பாஜ 36 முதல் 42 இடங்களிலும், மற்றவை 2 முதல் 5 இடங்களையும் கைப்பற்றும். கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 118 முதல் 130 இடங்களிலும், பாஜ 99 முதல் 111 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இங்கு பாஜ ஆட்சியை பறிகொடுக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 இடங்களில் காங்கிரஸ் 67 முதல் 77 இடங்களிலும், பாஜக 114 முதல் 124 இடங்களிலும், மற்றவை 5 முதல் 13 இடங்களிலும் கைப்பற்றும். இங்கு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும். பாஜ ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் காங்கிரஸ் 43 முதல் 55 இடங்களிலும், பாஜக 5 முதல் 11 இடங்களிலும், ஆளும் பிஆர்எஸ் 49 முதல் 61 இடங்களிலும், மற்றவை 4 முதல் 10 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி – காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.5 மாநிலங்களிலும் மொத்தமுள்ள 679 இடங்களில் காங்கிரஸ் 279 முதல் 323 இடங்களிலும், பாஜ 254 முதல் 288 இடங்களிலும், எம்என்எப் 17 முதல் 21 இடங்களிலும், இசட்பிஎம் 10 முதல் 14 இடங்களிலும், பிஆர்எஸ் 49 முதல் 61 இடங்களிலும், மற்றவை 11 முதல் 32 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த கருத்துக் கணிப்பை பார்க்கும் போது, மத்திய பிரதேசத்தில் காங்கிரசும், ராஜஸ்தானில் பாஜகவும் ஆட்சியை கைப்பற்றும். சட்டீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும். தெலங்கானாவில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மிசோரமில் ஆளுங் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi