தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தமிழ்நாட்டில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, பல டிவி சேனல்களும், தனியார் அமைப்புகளும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை மாலை 6.30 மணிக்கு வெளியிடத் தொடங்கின. இதில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் 18-சிஎன்என் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 36 முதல் 39 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக பூஜ்ஜியம் அல்லது 2 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், பாஜ 1 முதல் 3 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது. ஏபிபி நியூஸ்-சிவோட்டர் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 37 முதல் 39 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் பாஜ 2 தொகுதிகளை வெல்லலாம் என்றும், அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாடுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 33 முதல் 37 தொகுதிகளையும், அதிமுக பூஜ்ஜியம் முதல் 2 தொகுதிகளையும், பாஜ 2 முதல் 4 தொகுதிகளையும் வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக ஒரு தொகுதியிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஜூலை-08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை