முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல்?.. செப்டம்பருக்கு தொகுதி பங்கீடு… அக் 2ம் தேதி தேர்தல் அறிக்கை : I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் யோசனை!!

மும்பை : முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்பதால் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று I.N.D.I.A கூட்டணியின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். வெகு விரைவில் பொதுவான செயல் திட்டம் அல்லது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி ,மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி உள்ள நிலையில், செப்டம்பர் 18ம் தேதி முதல் சிறப்பு நாடாளுமன்றத் கூட்டத் தொடருக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்நேரத்திலும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் I.N.D.I.A கூட்டணி உடனே சுதாரிக்க வேண்டும் என்று, செப்டம்பர் 30ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் ஆமோதித்துள்ளார். தென் மாநிலங்களில் பாஜக வலுவாக இல்லை என்பதால் நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் மட்டுமாவது விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

அதே போல கூட்டணிக்கான பொதுவான செயல் திட்டம் அல்லது தேர்தல் அறிக்கையை அக் 2ம் தேதி அன்று டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தி உள்ளார்.பொதுவான செயல் திட்டம் வேண்டும் என்ற கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆமோதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஒருங்கிணைப்பு குழுவில் 11 பேருக்கு பதிலாக மேலும் சில உறுப்பினர்களை சேர்க்கலாம் என்று காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு