தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் மட்டுமே இருப்பதால் கே.எஸ்.அழகிரி தொடர்ந்து நீடிக்க கார்கேவிடம் 9 எம்எல்ஏக்கள் கோரிக்கை: பெங்களூரில் நடந்த சந்திப்பில் வலியுறுத்தல்

சென்னை: தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பதால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் கே.எஸ்.அழகிரி தொடர்ந்து நீடிக்க வலியுறுத்தி ஒரு எம்பி, 9 எம்எல்ஏக்கள், 30 மாவட்ட தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவை பெங்களூரில் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் அவரை சந்தித்து பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவரை நியமிப்பது வழக்கம் என்றாலும், அவரது தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. இந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அமோக வெற்றியை பெற்றனர். இதனால் கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல பெயர் இருந்து வருகிறது.

இந்நிலையில், தலைவர் பதவியில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக நீடித்து வருவதால் அந்த பதவியை பிடிக்க மூத்த தலைவர்கள் பலர் அவரை மாற்ற வேண்டும் என்று டெல்லி மேலிடத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி பேசும் போது கூட, ‘நான் பல ஆண்டுகளாக தலைவராக இருக்கிறேன், புதிய தலைவரை நியமித்தால் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டார். எனவே, அவ்வப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்ற பரபரப்பு எழுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதேபோன்று கடந்த சில நாட்களாக கே.எஸ்.அழகிரி மாற்றம் என்ற செய்தி தமிழ்நாடு காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர் இப்போது வருகிறார், அப்போது வருகிறார் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் டெல்லி மேலிடமோ இந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. ஒன்று அவரை மாற்றி புதிய தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அல்லது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அவரையே அதுவரை தலைவர் பதவியில் நீடிப்பார் என்ற அறிவிப்பையாவது வெளியிட வேண்டும்.

அப்போது தேர்தல் பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற முடியும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஆனால் டெல்லி மேலிடமோ ஒரு முடிவை எடுத்து அறிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில், தலைவரை மாற்றினால் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளை தொடங்குவது என்பது சாத்தியமற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளின் கருதுகின்றனர்.

இதனால் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முனிரத்தினம், அசன் மவுலானா, கருமாணிக்கம் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள், 30 மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில முக்கிய நிர்வாகிகள் பலர் நேற்று மாலை பெங்களூர் சென்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு சந்தித்தனர். அகில இந்திய தலைவருடனான இந்த சந்திப்பின் போது, கே.எஸ்.அழகிரி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், ‘தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்றினால் கட்சியில் குழப்பம் தான் நீடிக்கும். தேர்தல் பணிகளிலும் சுணக்கம் ஏற்படும். எனவே அவரை மாற்றும் முடிவு இருந்தால் அதை கைவிட வேண்டும்’’ என்றும் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்தார். அப்போது, தலைவர் பதவி விவகாரம் குறித்து கார்கேவுடன் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்