அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: வரும் 30ம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று கலெக்டர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கும் தேர்தல் ஆணையம், எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரை சின்னத்தை ஒதுக்காமல் நிராகரித்து வருகிறது. தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. நேர்மையோடு தேர்தலை நடத்தினால் தான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். எனவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி தில்லைநகரில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ நேற்று அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம்தான் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளது. கடந்த காலங்களைபோல் இப்போது இல்லை. வேட்பாளரையும், சின்னத்தையும் நன்கு தெரிந்து கொண்டு ஓட்டு போடும் அளவிற்கு மக்கள் தெளிவாக உள்ளனர். அனைவரின் கைகளிலும் மொபைல் போன் உள்ளது. எனவே 24 மணி நேரத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். மதவாத பாஜவை எதிர்க்கும் கட்சியாக திமுகவை மக்கள் பார்க்கின்றனர். எனவே அந்த கூட்டணியில் போட்டியிடும் மதிமுகவையும், அதன் சின்னத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு ஓட்டளிப்பார்கள். தேர்தல் ஆணையம் புதிது புதிதாக காரணங்களை கூறி சின்னம் ஒதுக்குவதில் மெத்தனம் காட்டுகிறது. எங்களுக்கு மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சி போன்றவர்களுக்கும் இதே நிலைதான். இவ்வாறு அவர் கூறினார்.