வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் காமுட்டா கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜைகள் மற்றும் வாண வேடிக்கைகள் நடைபெற்றன. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி(55) என்பவர், வாண வெடிகளை தனது மடியில் வைத்திருந்தார்.
அப்போது வாண வெடியில் இருந்து வந்த நெருப்பு பொறி, பெரியசாமி வைத்திருந்த வெடியில் பட்டு சுமார் 20க்கும் மேற்பட்ட வெடிகள் பெரியசாமி மடியில் வெடித்ததில், பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெரியசாமி அருகில் அமர்ந்து இருந்த ராமலிங்கம்(65) என்பவரும் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.