ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஏலகிரி : ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியுற்ற தலமாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை 14 கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டுள்ளது. 10வது கொண்டை ஊசி வளைவில் பார்வை மையம், 11 கொண்டை ஊசி வளைவில் தொலைநோக்கு இல்லம் ஆகியவை சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏலகிரி மலையில் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சகச விளையாட்டு, பறவைகள் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், கதவநாச்சியம்மன் திருக்கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இதனால் ஏலகிரி மலைக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் , தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து பொழுது போக்கி செல்கின்றனர்.

அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அரசு சுற்றுலா தலங்களான படகு இல்லத்திலும் இயற்கை பூங்காவிலும் குடும்பத்துடன் திரண்டனர். மேலும், படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குடும்பத்தோடும், நண்பர்களோடும், குழந்தைகளோடும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் இயற்கை பூங்காவில் மலர்கள், பூக்களை ரசித்தும், புல் தரையின் மேல் அமர்ந்து போழுது போக்கினர். அதனைத் தொடர்ந்து செல்பி பாண்டா பார்க்கில் குழந்தைகள் சாக்லேட் செய்தும், வில் அம்பு எய்து விளையாடியும், பிஷ் ஸ்பாவில் கால்களை வைத்தும் மகிழ்ந்தனர்.

அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்

ஏலகிரி மலை படகு இல்லம், இயற்கை பூங்காவில் உள்ள கழிப்பறைகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே துறைசார்ந்த அதிகாரிகள் அனைத்து சுற்றுலா தலங்களில் உள்ள கழிப்பறைகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்