இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் துறைகளில் வகுப்பு 1ன் கீழுள்ள இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா- அரசுத் தேர்வுகள் இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா-மாநிலக் கல்வி கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், தொடக்க கல்வித்துறை இயக்குநர் சேதுராம வர்மா- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
மேலும் தொடக்க கல்வி இயக்குநர் பணியில் இருந்து இயக்குநர் சேதுராமவர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அந்த பணியிடத்தில், தேர்வுத் துறையின் இணை இயக்குநர் பூ.நரேஷ் பதவி உயர்வு மூலம் – தொடக்க கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்த பணியிட மாற்ற அரசாணை வெளியானதை அடுத்து, மேற்கண்ட இயக்குநர்கள் அந்தந்த பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்றனர். இந்நிலையில் மேற்கண்ட பணியிட மாறுதல் அரசாணை நேற்று காலை 11 மணி அளவில் வெளியான நிலையில், மதியம் 1 மணி அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றல் உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த குமரகுருபரன், அந்த பணியிடத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.