Monday, August 26, 2024
Home » பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 3 இயக்குநர்கள் மாற்றம்: தொடக்க கல்விதுறைக்கும் புதிய இயக்குநர் நியமனம்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 3 இயக்குநர்கள் மாற்றம்: தொடக்க கல்விதுறைக்கும் புதிய இயக்குநர் நியமனம்

by Karthik Yash

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்தும், தொடக்ககல்வித் துறைக்கு புதிய இயக்குநரை நியமித்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் நேற்று மதியம் வெளியான அரசாணையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் மாற்றப்பட்டார். பள்ளிக்கல்வித் துறையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் துறைகளில் பணியாற்றி வரும் இணை இயக்குநர்கள் 9 பேர் நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து 3 இயக்குநர்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வுத்துறையின் இணை இயக்குநர் ஒருவர் இயக்குநராக பதவி அளித்தும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் துறைகளில் வகுப்பு 1ன் கீழுள்ள இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா- அரசுத் தேர்வுகள் இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா-மாநிலக் கல்வி கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், தொடக்க கல்வித்துறை இயக்குநர் சேதுராம வர்மா- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

மேலும் தொடக்க கல்வி இயக்குநர் பணியில் இருந்து இயக்குநர் சேதுராமவர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அந்த பணியிடத்தில், தேர்வுத் துறையின் இணை இயக்குநர் பூ.நரேஷ் பதவி உயர்வு மூலம் – தொடக்க கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்த பணியிட மாற்ற அரசாணை வெளியானதை அடுத்து, மேற்கண்ட இயக்குநர்கள் அந்தந்த பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்றனர். இந்நிலையில் மேற்கண்ட பணியிட மாறுதல் அரசாணை நேற்று காலை 11 மணி அளவில் வெளியான நிலையில், மதியம் 1 மணி அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றல் உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த குமரகுருபரன், அந்த பணியிடத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi