காஞ்சிபுரம்: கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 14 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் அருகே உள்ள தூசி பாலிடெக்னிக் கல்லூரியில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக தெற்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தூசி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆ.சசிகுமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் கலந்துகொண்டு, கல்வி உதவித்தொகையாக ஒரு மாணவனுக்கு ரூ.1,05,000 வீதம் 14 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆண்டு முழுவதும் 100 ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய பெருந்தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சசிக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ராம் பிரசாத், தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளர் தசரதன், திலகர், வெங்கடேஷ், எஸ்.வி.ரமேஷ், பி.எம்.நீலகண்டன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.