கடந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக அமெரிக்காவிற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்கா தூதரக ஆலோசகர் ரஸல் ப்ரௌன் தகவல்

சென்னை: கல்விக்காக அமெரிக்காவிற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என அமெரிக்கா தூதரக ஆலோசகர் ரஸல் ப்ரௌன் தகவல் தெரிவித்துள்ளார். மாணவர் விசா தினமான நேற்று இந்தியாவில் உள்ள அமெரிக்க‌ தூதரகப் பணியாளர்கள் 3900 மாணவர் விசா விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தனர். ‘விண்ணப்பதாரர்களுடன் தூதரக மற்றும் எஜுகேஷன் யூஎஸ்ஏ ஊழியர்கள் உரையாடி அமெரிக்க கல்வி குறித்த தகவல்களை பகிர்தல்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் தூதர் எரிக் கார்செட்டி கூறியதாவது : “அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள ஒவ்வொரு சர்வதேச மாணவரும் சாதனையாளர் ஆவார். கல்வியில் சிறந்து விளங்குவதற்கான பல வருட கடின‌ உழைப்பை பிரதிபலிக்கிறார்கள். இதற்கு முன் அமெரிக்காவுக்கு சென்ற மாணவர்களை போன்றே இன்றைய இந்திய மாணவர்களும் மிகப்பெரும் ஆற்றல் வளத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தூதரக விவகாரங்களுக்கான அமைச்சக ஆலோசகர் ரஸல் ப்ரௌன் கூறுகையில்: அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்களின் மிகப்பெரும் பிரிவினராக இந்திய மாணவர்கள் இந்த ஆண்டு உருவெடுக்கும் நிலை இருப்பதால், மாணவர் விசா விண்ணப்பதாரர்களை வரவேற்க வெளியுறவுத்துறையும் எஜுகேஷன் யூஎஸ்ஏ பணியாளர்களும் உற்சாகமாக உள்ளனர். கல்விக்காக அமெரிக்காவை தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த மாணவர் விசாக்களை விட அதிக மாணவர் விசாக்களை 2023ம் ஆண்டில் இந்தியாவுக்கான‌ அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது. 2021 மற்றும் 2023க்கு இடையில் மற்ற அனைத்து வகை விசாக்களுக்கான தேவை 400 சதவீத அதிகரித்துள்ளபோது மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அவர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கும் அமெரிக்க அரசு உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி இலக்காக அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும் அமெரிக்கக் கல்வியையே 69 சதவீத இந்திய மாணவர்கள் விரும்புவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

Related posts

தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திரைத்துறையினர் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கப்பல் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு