கல்விதான் மாணவர்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கல்விதான் மாணவர்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. அதிலும் தற்போது முறைகேடுகளை பார்க்கிறோம். நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். சென்னையில் நேற்று பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பள்ளி கல்வித்துறையை நவீனப்படுத்த பேராசிரியர் அன்பழகனார் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79,723 ஆசிரியர்களுக்கு ‘TAB’’ என்னும் கையடக்க கணினி வழங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் இதை பயன்படுத்தி, மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பித்தல் முறைகள் அமையும் என்று நம்புகிறேன். அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட இருக்கிறது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்கு பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றை பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும்.

முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகளை இன்றைக்கு துவக்கி வைத்திருக்கிறேன். இது எல்லாமே உங்களுக்காகத்தான். என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம். நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான்.

மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான். படியுங்கள், படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்முன்னால் ‘புல் ஸ்டாப்’ தெரியக்கூடாது. ‘கமா’ தான் தெரிய வேண்டும். கீப் ரன்னிங். கீப் வின்னிங். கீப் ஷைனிங். Make Tamil Nadu proud! கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை ‘நீட்’ போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம்.

அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். ‘நீட்’ போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு. மாணவ செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக் கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.

கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும். அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்கவேண்டும். ‘படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்’ என்று யாரோ ஒன்று இரண்டு பெயரை பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும். நீங்கள் எல்லோரும் உலகை வெல்லும் ஆற்றலைப் பெற்று, பகுத்தறிவோடு செயல்பட தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி