ஆம் ஆத்மி எம்பி வீட்டில் ஈடி சோதனை: யாரும் பயப்படவேண்டாம்: கெஜ்ரிவால் தைரியம்

குருகிராம்: பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சீவ் அரோரா மற்றும் சிலரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அரியானாவின் குருகிராமில் உள்ள எம்பி சஞ்சீவ் அரோரா வீடு மற்றும் லுதியானாவில் உள்ள சிலரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தனது எக்ஸ் பதிவில், ‘‘ ஆம் ஆத்மியின் எம்பியும் தொழிலதிபருமான சஞ்சீவ் அரோராவுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சோதனையானது கட்சியை உடைக்கும் முயற்சியாகும்.

ஆனால் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் எதற்கும் பயப்படமாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘ பிரதமர் ஆம்ஆத்மி கட்சியை அழிக்க அரசின் அனைத்து ஏஜென்சிகளையும் பயன்படுத்தியுள்ளார். கடவுள் ஆம் ஆத்மி கட்சியோடு இருக்கிறார். பயப்படதேவையில்லை. எந்த தவறும் செய்யப்படவில்லை” என்றார்.

 

Related posts

சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி

234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக

லடாக்கில் லேசான நிலநடுக்கம்