ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹேமந்த் சோரனுக்கு எதிராக ‘ஈடி’ சுப்ரீம்கோர்ட்டில் மனு

புதுடெல்லி: ஜார்கண்ட் முதல்வருக்கு அளித்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக அவரை நில மோசடி தொடர்பான பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. சிறையில் இருந்த ஹேமந்த் சோரன், கடந்த 4ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். நேற்று பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அமலாக்க துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்ததால் புலன் விசாரணை பாதிக்கப்படும். மேலும் மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளுக்கும் சிக்கல் ஏற்படும். எனவே உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts

கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை