எடப்பாடி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது: எங்கள் கூட்டணிக்கு பாஜதான் தலைமை ஓபிஎஸ் அதிரடி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு. அவர்கள் எந்த நேரத்திலும் வெற்றி பெறமுடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜ கூட்டணியில் வேறு எந்த கட்சிகள் சேர உள்ளது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கூட்டணியின் தலைமை பாஜ தான். இன்னும் நிறைய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளன. அதிமுக கொடி, வேஷ்டி ஆகியவற்றை பயன்படுத்த ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்குத் தான் தடை விதித்துள்ளனர். ஆனால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தடை இல்லை. எங்கள் உடம்பில் ஓடும் அதிமுக ரத்தத்தை யாராலும் மாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் சந்தர்ப்பங்கள் கூடி வரும் போது சசிகலாவை உறுதியாக சந்திப்போம். கே.பி.முனுசாமியின் கடந்த கால அரசியலை பார்த்து வந்தீர்கள் என்றால் அவர் குறித்த எந்த கேள்வியும் கேட்க மாட்டீர்கள். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி எதுவும் அமையாது. எந்த கட்சியும் அவருடன் போக தயாராக இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி அணி வெற்றி பெறாது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு பேசினார்.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்