சென்னை: போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசு நிதிக்குழுவுக்கு வழங்கிய அறிவுரையின்படி நிதிக்குழுவானது சொத்துவரியை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்த ேவண்டும் என்று சொல்லி அந்த அடிப்படையில் தான் உயர்த்தப்படுகிறது. உதய் மின் திட்டத்திலே தமிழகத்தை இணைத்து அதன் மூலமாக மின் கட்டண உயர்வுக்கு அன்றைக்கு அடித்தளமிட்டவர்கள் அதிமுகவினர் தான். அதிமுகவை தக்க வைப்பதற்காக அவர் நடத்துகின்ற நிகழ்ச்சிகளுக்கு அரசை தேவையில்லாமல் குற்றம் சொல்வதும், அவர்கள் காலத்தில் துவக்கி வைத்ததை எல்லாம் இப்போது ஏதோ புதிதாக நடப்பது போல குற்றம் சாட்டுவது போல இந்த போராட்டம் அமைந்திருக்கிறது.
விமான சாகசத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் அவர் கண்ணீர் சிந்தியிருக்கிறார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற விமானப்படை அறிவித்து நிகழ்ச்சி நடைபெற்றது. எனவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கருத்தை தெரிவிப்பதை தவிர்த்து, ஏதோ மாநில அரசு நடத்திய போல சொல்லியிருக்கிறார். இந்த பொய்யான புகார்களை சொல்லிக்கொண்டு போராட்டம் நடத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.