ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது 106 சாதிகளின் இடஒதுக்கீட்டை பறிக்க பழனிசாமி காரணமாக இருந்ததால், தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு அந்த பிரிவு மக்கள் வாக்களிக்கவில்லை. விரைவில் இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் அவரை தொண்டர்கள் ஓட, ஓட விரட்டியடிப்பர். அரசியலில் நன்றி கெட்டவர் பழனிசாமி மட்டுமே. இந்த தர்மயுத்தத்தில் நாம் வெற்றி பெறுவோம். தொண்டர்களின் பறிக்கப்பட்ட உரிமை மீட்டுத் தரப்படும்.
இவ்வாறு வர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறுகையில், ‘‘பாஜ கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம், பழனிசாமி மட்டும் பிரிந்து சென்றுள்ளார். அதிமுக கரையுடன் வேட்டி கட்டக்கூடாது, சின்னம் பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் எனக்கு மட்டும் தான் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவன் என்பதால், அன்றிலிருந்து நான் அதிமுக கரை வேட்டி கட்டுவதில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தமிழகத்தில் எங்கள் அணியே சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. ஜெயக்குமார் பதவி வெறி பிடித்தவர்.
எனவே, அவரது கருத்துக்கு பதில் அளிக்க தேவையில்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எதிர்வரும் நீதிமன்ற தீர்ப்பில் சின்னம் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும். இரண்டு அணிகளையும் இணைப்பது தான் சசிகலாவின் ஆசை. இதற்கு அவர் முயற்சித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பதவி ஆசையால் அதை ஏற்கவில்லை. நம்பிக்கை துரோகம் செய்து பதவி கொடுத்தவரை ஏமாற்றியதுடன், தேவையின்றி பேசும் பழனிசாமிக்கு தொண்டர்கள் இன்னும் 10 நாட்களில் பாடம் புகட்டுவர். அவர் கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருக்க ஆசைப்படுபவர்’’ என்று தெரிவித்தார்.