Friday, June 28, 2024
Home » தன் மீதான ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்ற எடப்பாடி இப்போது சிபிஐ விசாரணை கேட்கலாமா? பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

தன் மீதான ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தடைபெற்ற எடப்பாடி இப்போது சிபிஐ விசாரணை கேட்கலாமா? பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

by Ranjith
Published: Last Updated on

சென்னை: தன்மீதான ஊழல் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றவர்தான் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர். அவர் இப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்கலாமா? என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பே அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

அவை காவலர்கள் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றிய பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதே அவையில் கடந்த 20ம் தேதி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன். அன்றையதினம் அவையில் இருந்து, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது கருத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

மாறாக, தேவையற்ற பிரச்சினையை அவை கூடியதும் கிளப்பினார்கள். அவையினுடைய விதிமுறைப்படி, கேள்வி நேரம் முடிந்ததற்குப் பிறகுதான் மற்ற அலுவல்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தான் விதி இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விதிமுறையை மீறி, உடனடியாக அந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இங்கே ஒரு பெரிய ரகளையை செய்திருக்கிறார்கள்.

கேள்வி-பதில் நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி பிரச்னையைப் பற்றித்தான் விவாதிக்கப் போகிறோம் என்று பேரவைத் தலைவரும் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லியும், அதையும் மீறி அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு அப்படி நடந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு சபாநாயகரும் வேறு வழியில்லாமல் அவர்களை அன்றைக்கு அவையிலிருந்து வெளியேற்றினார்கள்.

அதற்குப்பிறகுதான் நான் அவைக்கு வந்தேன். வந்ததற்குப்பிறகு இதைக் கேள்விப்பட்டவுடன், மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறபோது எதிர்க்கட்சி, அதுவும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அவையில் இருக்க வேண்டும். எனவே மறுபரிசீலனை செய்து இதை சரிசெய்ய வேண்டுமென்று உங்களிடத்திலே வேண்டுகோள் வைத்தேன். சபாநாயகரும் அதை ஏற்றுக்கொண்டு, அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதி தந்தார்கள்.

ஆனால், அதற்குப்பிறகும் அதையும் ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் இந்த அவைக்கு வந்து ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு அதிமுகவினர் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்கிறார்கள். வேறு ஒன்றுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது. அது அவர்களுடைய மனதை உறுத்துகிறது. கண்ணை உறுத்துகிறது. அதை மக்களிடமிருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக இந்தக் காரியத்தைத் திட்டமிட்டு தொடர்ந்து செய்கிறார்கள்.

கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு என்னென்ன பரிகாரம் செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் பல்வேறு விளக்கங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உள்துறைச் செயலாளரையும், டிஜிபியையும் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தரச் சொல்லி இருக்கிறேன்.

குற்றவாளிகளில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தேடப்பட்டு வருகிறார்கள். கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. இறந்தோர் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மதுவிலக்கை கவனித்து வந்த ஏ.டி.ஜி.பி. கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் இந்த அரசு எடுத்துள்ளது. இதற்கிடையில் நேற்றைய முன்தினம் (24ம்தேதி) கூட ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்வது என்பது நியாயம்தான். ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஜனநாயகத்திலே இருக்கக்கூடிய உரிமை அது. யார் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம்.

அது நியாயமான முறையில் ஆர்ப்பாட்டமாக இருந்தால், அரசு அதற்கு அனுமதி அளிக்கும். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்திலேகூட திரும்பத் திரும்ப சிபிஐ விசாரணை வேண்டுமென்று பேசியிருக்கிறார்கள். இதே எதிர்க்கட்சித் தலைவர் அப்போது முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது சி.பி.ஐ. விசாரணை கொண்டுவரப்பட்டதை அவர் மறந்திருக்க மாட்டார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி, அதிலே முறைகேடு நடந்திருக்கிறது, அதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென்று நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. அமைப்பு மீது நம்பிக்கை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சி.பி.ஐ. மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான், அதற்குத் தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரர்தான் (எடப்பாடி பழனிசாமி) இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று முழங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, இதுகுறித்து பேரவைத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

seven + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi