அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி மட்டுமே சேர்ந்துள்ளது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதில் தேமுதிகவுடன்தான் நேரடி பேச்சு வார்த்தை நடந்துள்ளது. பாமகவுடன் ரகசிய பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியை இழுக்க அதிமுகவும், பாஜவும் போட்டி போட்டன. அதில், அதிமுகவில் சேர கிருஷ்ணசாமி முடிவு செய்தார். சில நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணசாமியை, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து நேற்று எடப்பாடி பழனிசாமியை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். அப்போது தென்காசி உள்பட 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார். அதற்கு எடப்பாடி, தென்காசி தொகுதியில், உங்கள் மகனை நிறுத்துங்கள். நீங்கள் நின்றால் அதிமுகவினர் ஓட்டுப்போடுவது கடினம் என்று கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ணசாமியோ, தான் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளார். இதுகுறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஓரிரு நாளில் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.