திண்டுக்கல்: நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருகிறார் என முத்தரசன் குற்றம் சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி அளிப்பு, பேரவை கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘இந்தியா’ கூட்டணி நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. மூன்றாவது கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால் நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
பாஜ அரசியல் ரீதியாக இந்த கூட்டணியை எதிர்கொள்ள முடியாமல் மாறாக வேறு வழிமுறைகளில் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது.இந்தியாவில் மதக்கலவரங்கள் மூலம் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற மிக குறுகிய நோக்கதோடு பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போதே சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஏன் இணைந்து குரல் கொடுக்காமல் நாடகமாடி வருகிறார். இவ்வாறு கூறினார்.