திருப்பரங்குன்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்குவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. பொதுமக்களும், பக்தர்களும் அழைத்ததால் சென்றேன் என நிலையூர் ஆதீனம் திடீர் பல்டி அடித்துள்ளார். மதுரையை அடுத்த வலையங்குளத்தில் கடந்த 20ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற்றது. இதில் சர்வமதத்தினர் சார்பில் சர்வ சமய பெரியோர்கள் கலந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்கிற பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி வழங்கப்பட்டது. இதில் இந்து சமயம் சார்பில் மதுரை அருகே நிலையூர் பகத்சிங் காலனியில் வசிக்கும் ஆதீனமான பி.கே.சுப்பிரமணிய சுவாமிகள் கலந்து கொண்டார்.
தற்போது அவர் பட்டம் தொடர்பாக அளித்து விளக்கத்தில், ‘‘நானாக முன்வந்து எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் கொடுக்கவில்லை. பொதுமக்களும், பக்தர்களும் சர்வ மத பெரியவர்களுடன் நீங்களும் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் கொடுக்க வேண்டும் என அழைத்ததால் நான் சென்றேன். மற்றபடி என்ன பட்டம், எதற்காக வழங்குகிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. விழா மேடைக்கு சென்ற பின்னரே புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்படுகிறது என்று எனக்கு தெரியும்’’ என கூறியுள்ளார்.