புதுக்கோட்டை: மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து, அதை செலவு செய்து கட்சியை எடப்பாடி அபகரித்துள்ளார். அதிமுக தற்போது தீயவர்களின் கையில் சிக்கி உள்ளது. அவர்கள் பிடியில் இருந்து அதிமுக தொண்டர்களை மீட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அப்போது அமமுக நிலைப்பாடு தெரியும். வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குள் அமமுக, நாடாளுமன்ற தேர்தல் குறித்து தன்னுடைய நிலைப்பாடை தெரிவிக்கும். ஓபிஎஸ் மாநாடு குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அதிமுக தற்போது தீயவர்களின் கையில் சிக்கி உள்ளது. அவர்கள் பிடியிலிருந்து அதிமுக தொண்டர்களை மீட்க வேண்டும். அப்போதுதான், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
நான் உயிரோடு இருக்கும் வரை அதிமுகவை மீட்பதில் பின் வாங்க மாட்டேன். பொதுச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி விலைக்கு வாங்கியுள்ளார். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து விட்டு, பதவி போன பின்பு அதனை பயன்படுத்தி செலவு செய்து கட்சியை அபகரித்து உள்ளார். ஓபிஎஸ் என்னை சந்திக்க வந்தால் அவரை நான் கண்டிப்பாக சந்திப்பேன். அவரும் ஜெயலலிதா, எம்ஜிஆரின் தொண்டர் தான். கடந்த கால தவறுகளை உணர்ந்து, தற்போது துரோகத்திற்கு எதிராக ஓபிஎஸ் போராடி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.