சென்னை : கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இ.பி.எஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. “எதனடிப்படையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோருகிறீர்கள்?” என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு “காலில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கோருகிறோம்” என்று இ.பி.எஸ். தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து விரிவாக வாதிட அனுமதிக்க வேண்டுமென்ற பழனிசாமி தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணை டிசம்பர் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.