கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஆசிரியர் பணி நியமன மோசடி தொடர்பாக தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களும், தகுதி பட்டியலில் இடம்பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மோசடி, அதனுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் மேற்குவங்க கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் குடியிருப்புகள் கட்டும் நிறுவன தொழிலதிபர் ஒருவருக்கும் முக்கிய பங்கு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தெற்கு கொல்கத்தாவின் நக்டலாவில் உள்ள தொழிலதிபரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.