புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், சிறுகுறு தொழில்கள் மீது பயாலஜிக்கல் அல்லாத பிரதமர் மோடியின் தாக்குதலால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் நிறுத்தியது.
2017ம் ஆண்டு ஜூலையில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் போதுமான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் முறைசாரா துறையை பாதுகாப்பதற்கான பொருளாதார திட்டம் இல்லாமல் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி கொண்டு வரப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு ஆகியவை பொருளாதார பேரழிவுகளுக்கு வழிவகுத்தன. பிரதமரின் தன்னிச்சையான கொள்கை உருவாக்கம் மற்றும் பிரச்னைகளில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட மறுத்ததன் பொருளாதார விளைவுகளை இப்போது 140கோடி இந்தியர்கள் செலுத்துகிறார்கள் என்றார்.