Thursday, September 19, 2024
Home » கிழக்கு கடற்கரை சாலைப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

கிழக்கு கடற்கரை சாலைப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

by Neethimaan

சென்னை: கிழக்குக் கடற்கரைச் சாலைப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையினை 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில், நிலஎடுப்பு, மின்சார வாரியத்தின் பயன்பாட்டுப் பொருட்களை மாற்றியமைத்தல், சென்னை குடிநீர் வாரியத்தின் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, சென்னை தலைமைச் செயலக அலுவலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: வருவாய்த்துறை, சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் இப்பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள், எந்தெந்த புல எண்களில் அவார்டு வழங்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டிய புல எண்கள், நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகள், மேல்முறையீடுகள் போன்றவற்றை விரைந்து முடிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். அரசுப் புறம்போக்கு நிலங்களுக்கு முன்நுழைவு அனுமதி பெறப்படாத இடங்களில் விரைவில் அனுமதி பெறவேண்டும்.

கொட்டிவாக்கம் கிராமத்தில், 270 மீ. நீளத்திற்கு குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகள் நிலுவையில் உள்ளது. இப்பணிகளை சென்னை குடிநீர் வாரியம் தனிக்கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இயந்திர துளை (Machine Holes) அமைக்கும்போது, நெடுஞ்சாலைத்துறையுடன் ஆலோசனை செய்து, பணிகள் உடனுக்குடன் முடிக்க வேண்டும். சுமார் 11 கிலோ மீட்டர் நீளத்தில், 2.750 கிலோ மீட்டர் நிலஎடுப்பு நிலுவையில் இருப்பதாலும், மின்பெட்டிகள் மற்றும் புதை மின்வடங்கள் மாற்றியமைக்கும் பணிகள், பாதாளச்சாக்கடைப் பணிகள் போன்றவை முடிக்கப்படாமல் சாலை விரிவாக்கப்பணிகளுக்கு இடையூறாக உள்ளது.

இப்பணிகளை முடித்தப் பின்னர்தான் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் நடைபெறும்போது, தேவையான சாலைகள் தடுப்பான்கள், முன்னெச்சரிக்கைப் பலகைகள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களுடன் குழாய் பதிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும். கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து கிழக்குக் கடற்கரைச் சாலைப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் செயலாளர் செல்வராஜ், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நீலங்கரை உதவி காவல் ஆணையர் பாரத், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர், சென்னை பெருநகரத் தலைமைப் பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், சென்னை குடிநீர் வாரியம் தலைமைப் பொறியாளர் கண்ணன், சென்னை பெருநகரத்திட்ட வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் பாஸ்கரன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நிலஎடுப்பு சென்னை விஜயராஜ், சென்னை மின்சார வாரியம் செயற்பொறியாளர் ராமு, சென்னை பெருநகர கோட்டப் பொறியாளர் ராஜகணபதி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

10 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi