இ-சேவை மைய உரிமையாளரை கொலைவெறியுடன் தாக்கிய அதிமுக நிர்வாகி: சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடக்காட்டில் இ-சேவை மையம் நடத்தி வரும் இளைஞர் மீது அதிமுக நிர்வாகி கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, பரமன் நகரை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் வடகாடு தெற்கு கடை வீதி பகுதியில் இ-சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரது மையத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி தலைவரும், மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலத்தின் மகனுமான ராஜபாண்டியன் என்பவர் பல்வேறு பணிகளுக்காக அவ்வப்போது வருவார் அந்த வகையில் நேற்று இ-சேவை மையத்தில் பணி தொடர்பாக ராஜபாண்டியன் ஒருவரை இ-சேவை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த பணியை முடித்து தருவதில் சௌந்தராஜன் தாமத படுத்தியதாகவும் அதற்காக அவரை ராஜபாண்டியன் அலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை சௌந்தராஜன் எடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜபாண்டியன் இ-சேவை மையத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறவே சௌந்தராஜனை கொலைவெறியுடன் ராஜபாண்டியன் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் தற்போது அது வெளியாகியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சௌந்தராஜன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில் காவல் துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்