தஞ்சாவூர் : தஞ்சையை அடுத்த சாமிப்பட்டி பகுதியில் கோடை அறுவடை செய்யப்ட்ட வயல்களில் வாத்து மேய்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம், சூரியம்பட்டி, ரெகுநாதபுரம், சாமிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோடை அறுவடை முடிந்துள்ளது. இந்த வயல்கள் தற்போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த வயல்களில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்து பெரிதும், சிறியதுமாக நூற்றுகணக்கான வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. வாத்து இறைச்சிக்கு பெரியளவில் கிராக்கி இல்லை. இருப்பினும் வாத்து முட்டைகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கேரளாவில் வாத்து முட்டைகளுக்கு சந்தை வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இந்த வாத்துகளுக்கு ஒரே இடத்தில் வைத்து தீவனம் இடுவது என்பது பெரிய அளவில் செலவை ஏற்படுத்தும் என்பதால் அறுவடை முடிந்த வயல்களில் சிதறிய நெல்மணிகள், புழுக்கள், பூச்சிகள் வாத்துக்களுக்கு நல்ல இரையாக அமையும். இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய்ச்சலுக்காக வந்துள்ளன. தற்போது கோடை அறுவடை முடிந்து அடுத்தகட்டமாக குறுவை சாகுபடிக்கு வயலை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சை அருகே சாமிப்பட்டி பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகளை மேய விட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:முட்டை வியாபாரத்துக்காக மட்டும் தான் நாங்கள் வாத்து வளர்க்கிறோம். 2 1/2 வயதான பிறகு வாத்துகள் முட்டை விடுவது குறைந்து விடும். அந்த வாத்துகளை மட்டும் கறிக்காக விற்பனை செய்து விடுவோம்.
வாத்துக்களை ஆயிரக்கணக்கில் வளர்த்தால் தான் முட்டைகள் அதிகம் கிடைத்து லாபம் வரும். ஒரே இடத்தில் வைத்து வாத்துகளை வளர்த்து அதற்கு தீவனம் போடுவது என்பது முடியாத காரியம். செலவும் மிக அதிகம். அதனால் ஊர் ஊராக சென்று அறுவடை முடிந்த நெல் வயல்களில் வாத்துகளை மேய்க்கிறோம். வாத்துகள் மேய்வதால் அதன் எச்சங்கள் வயலுக்கு இயற்கை உரமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.