டிடிவிக்கு தேனியை விட்டு கொடுத்தது ஏன்? ஓபிஎஸ் ‘அடடே’ விளக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு பண்ணை வீடு உள்ளது. இங்கு அவர் நேற்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால் மிகப்பெரும் பொருளாதார செலவு ஏற்படும். மேலும் பல்வேறு சோதனைகளையும் தொண்டர்கள் சந்திக்க வேண்டி வரும். எனவே தொண்டர்களை சோதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். டிடிவி.தினகரன் எண்ணம், செயல், இதயம் தேனியை சுற்றியே இருந்தது என்பதை நான் நன்றாகவே அறிவேன். அதன்படி தேனி தொகுதியில் அவர் போட்டியிட நாங்கள் ஆதரவு தெரிவித்தோம்.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் அவரை வெற்றிபெறச் செய்ய பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பினர். டிடிவி.தினகரனும் தேனியை விரும்பியதால், நமது நன்றிக்கடனாக தேனி தொகுதியை அவருக்கு தந்திருக்கிறோம். நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை ரகசியமாக வைத்திருந்தேன். நீதி கேட்க ராமநாதபுரம் தான் சரியான தொகுதி என்று முடிவு செய்தேன். சரியான விடையை அவர்களால் தான் தர முடியும். அதிமுக உண்மை தொண்டர்களின் உரிமையை காக்கும் இந்த போராட்டம் வெற்றியடைந்து அது ஒரு சக்தியாக வெளிப்படும். தொகுதியாக ராமநாதபுரம் இருக்கும். நான் ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் இங்கு தான் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்