குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி

புழல்: புழல் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம், காட்டுநாயக்கன் நகர், காந்தி தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(39). ஆட்டோ டிரைவரான இவருக்கு, சரஸ்வதி(35) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். சரஸ்வதி, செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார்.

கருணாகரன், அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகன், மகளுடன் போதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கருணாகரன், மனைவி மற்றும் மகன், மகளுடன் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி சரஸ்வதி, வீட்டிலிருந்த சம்மட்டியை எடுத்து கணவர் தலையில் சரமரியாக தாக்கினார்.

அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சோழவரம் போலீசார், தலையில் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் கருணாகரனை 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவனை தாக்கிய மனைவி சரஸ்வதியை சோழவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி சம்மட்டியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

உங்களை தேடி உங்கள் ஊரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் நேரில் ஆய்வு

ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி