Saturday, June 29, 2024
Home » திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது

திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது

by MuthuKumar

துரைப்பாக்கம்: திருவான்மியூரில் வெப்சைட் உருவாக்கும் நிறுவனத்தில் போதையில் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரான வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது செய்யப்பட்டார். சென்னை துரைப்பாக்கம் கஸ்டம்ஸ் காலனி பிரதான சாலையில் வெப்சைட் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரியை சேர்ந்த தரணிதரன் (34), திருவான்மியூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (34) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிறுவனம் நேற்று அரை நாள் மட்டுமே இயங்கியுள்ளது. அப்போது, தரணிதரனும் ஹரிஹரனும் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலையில் திடீரென நிறுவன உரிமையாளர் மீராவை தரணிதரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘எனக்கும் ஹரிஹரனுக்கும் தகராறு ஏற்பட்டது. நான் தள்ளிவிட்டதில் கீழே விழுந்தவர் எழுந்திருக்கவில்லை’ என்று கூறியுள்ளார். இதனால் பயந்துபோன மீரா, துரைப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 108 ஆம்புலன்சும் வரவைக்கப்பட்டது. பரிசோதனையில், ஹரிஹரன் இறந்து விட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தரணிதரனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ஒரே நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வந்த தரணிதரனின் முன்னாள் காதலியிடம் ஹரிஹரன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தரணிதரன், துரைப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வந்து மீண்டும் ஹரிஹரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஹரிஹரனும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. போதை தலைக்கு ஏறியதில் ஆத்திரமடைந்த தரணிதரன், ஹரிஹரனின் மார்பு மற்றும் வயிற்றில் பலமாக அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த ஹரிஹரன் சாலையில் விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் எழுந்து வராததால் பயந்துபோன தரணிதரன், நிறுவன உரிமையாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணிதரனை கைது செய்தனர். கைதான தரணிதரனின் தந்தை ஆரோக்கியசாமி புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் என்பது குறிப் பிடத்தக்கது. வெப்சைட் உருவாக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியிலும், ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

5 + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi