Friday, September 20, 2024
Home » மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட ஊர்வலத்துடன் சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட ஊர்வலத்துடன் சென்னையில் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

by Ranjith

* கடற்கரை பகுதிகளில் கூட்டம் அலைமோதியது,போலீசார் பாதுகாப்பால் அசம்பாவிதங்கள் தவிர்ப்பு

சென்னை: சென்னையில் 1500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நேற்று கடலில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையை பொறுத்தவரை 1500க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட சிலைகளும், புறநகரில் 1000க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஒருவாரமாக வழிபாடு செய்து வந்தனர்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி முடிந்து சென்னையில் சிலைகளை கரைக்க செப்.15ம் தேதி காவல்துறையினரால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை மாநகரில் உள்ள பிரதான கடற்கரைகளான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை மேதாளங்கள் முழங்க, உற்சாக கொண்டாட்டத்துடன் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர்.

அந்தவகையில், நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்.ஜி.ஆர்.நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

அதேபோல், அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து கொண்டுவந்த விநாயகர் சிலைகள் நீலாங்கரை கடற்கரையில் கரைக்கப்பட்டன. வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர் மற்றும் மாதாவரம் பகுதியில் இருந்து வந்த சிலைகள் காசிமேடு கடற்கரையில் கரைக்கப்பட்டன. திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருவொற்றியூர் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

பாதுகாப்பான முறையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பட்டினப்பாக்கத்தில் 90 அடி டிராக் உருவாக்கப்பட்டு அதில் 5 முதல் 7 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள், டிராலியின் உதவியுடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இதைவிட பெரிய சிலைகள் ராட்சத கிரேன் உதவியுடன் நேரடியாக கடலில் இறக்கி கரைக்கப்பட்டன. இந்த சிலை கரைப்பை பார்வையிட கடற்கரைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

சிலை கரைப்பு நிகழ்வில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க மாநகர் முழுவதும் சென்னை காவல் ஆணையர் அருண் மேற்பார்வையில், கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையர்கள் உட்பட 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, கூடுதலாக 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 3 உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டனர்.

சென்னையில் சிலை கரைக்கும் 4 இடங்களிலும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அந்த கேமராக்களின் காட்சிகளை பார்வையிட எல்.இ.டி திரை அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கரைப்பதை காண்பதற்காகவும், தங்களின் வீடுகளில் வைத்திருந்த சிறிய வகை விநாயகர் சிலைகளை கரைப்பதற்காகவும் ஏராளமான மக்கள் கடற்கரை பகுதிகளில் குவிந்தனர். மக்களின் வருகையையொட்டி நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறையினர் முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர்.

You may also like

Leave a Comment

19 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi