போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஆட்டோவில் கடத்தி சென்று சரமாரி தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்து அறுத்து கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அருகே போதைப்பொருள் விற்பனை தகராறில் ஆட்டோவில் சுடுகாடு பகுதிக்கு கடத்தி சென்று சரமாரி இரும்புராடால் தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். தப்பிய 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோனு (எ) கோபாலகிருஷ்ணன். இவர், கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசி விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான அண்ணாமலை (23), ஜில்லா (எ) தமிழரசன் (23) ஆகியோர் போதை பொருட்கள் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் போதை பொருட்கள் கிடைக்கும் இடத்தில் நேரடி தொடர்பு கிடைத்தவுடன் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து போதை பொருட்களை வாங்குவதை நிறுத்திக்கொண்ட இருவரும் அவர்களாகவே போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். கோபாலகிருஷ்ணனின் கஸ்டமர்களுக்கும் இவர்கள் இருவரும் நேரடியாக போதை பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் கோபாலகிருஷ்ணனின் வியாபாரம் குறைந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரி என்பவரிடம் நேற்று இரவு செல்போனில் தொடர்பு கொண்டு சவாரி இருப்பதால் ஆட்டோவை எடுத்து வரும்படி கூறியுள்ளார். அதன்படி ஹரி ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்றபோது, தயாராக நின்றுகொண்டிருந்த கோபாலகிருஷ்ணன், அவரது நண்பர்கள் ஆரிப், மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் உள்பட 4 பேர் கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி, எதற்காக இதையெல்லாம் கொண்டு வருகிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு கோபாலகிருஷ்ணன், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ ஆட்டோவை எடு என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து குண்டுமேடு பகுதிக்கு சென்றபோது அங்கு சாலை ஓரத்தில் அண்ணாமலை, தமிழரசன் மற்றும் அவரது நண்பர்கள் இருந்துள்ளனர். கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களிடம் பேச வேண்டும் என அழைத்து சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் ஆயுதங்களை எடுத்துள்ளனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அண்ணாமலை, தமிழரசன் மற்றும் நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இதில் அண்ணாமலையும், தமிழரசனும் கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். கோபாலகிருஷ்ணனும், அவரது நண்பர்களும் இருவரையும் ஆட்டோவில் இழுத்துபோட்டுகொண்டு இரும்புராடால் சரமாரி தாக்கிக்கொண்டே பெருங்களத்தூர் அருகே குண்டுமேடு பகுதியில் தாம்பரம் மாநகராட்சி கிடங்கு பின்புறமுள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ டிரைவர் ஹரி, சவாரி இருக்கிறது என அழைத்து ஏன் இது போன்ற பிரச்னைகளில் ஈடுபடுகிறீர்கள் என கேட்டுள்ளார். பின்னர், சுடுகாட்டில் இறங்கியதும் ஹரியை கும்பல் அனுப்பிவைத்துள்ளது. ஆட்டோவுடன் சுடுகாடு கேட் அருகே வந்தபோது ஹரி செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, பேச்சுவார்த்தைதான் நடக்கிறது. ஒரு பிரச்னையும் இல்லை, நீ போ என கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆனாலும் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி, ஓட்டேரி காவல்நிலையம் சென்று தனது ஆட்டோவில் சவாரி வந்த நபர்கள், யாரோ இருவரை அடித்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குண்டுமேடு சுடுகாடு பகுதிக்கு சென்றார்கள் என கூறியுள்ளார். இதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட பகுதி எங்கள் எல்லை இல்லை எனவும், பீர்க்கன்காரணை காவல்நிலைய எல்லை என்பதால் அங்கு சென்று புகார் அளியுங்கள் என கூறியுள்ளனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் ஹரி, பீர்க்கன்காரணை காவல்நிலையம் சென்று சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அண்ணாமலை மற்றும் தமிழரசன் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.இதையடுத்து இரு சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபாலகிருஷ்ணன் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. செல்போன் சிக்னலை வைத்து கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். போதைப்பொருள் விற்பனை தகராறில் கழுத்து அறுத்து இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!