கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உயர்ரக வெளிநாட்டு போதை பொருள்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நீலாம்பூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார், அவர்களது உடைமைகளை சோதித்தபோது, வெள்ளை நிற பொட்டலம் ஒன்று இருந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவர்களில் இருவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 2 பேர் என்பதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் இவர்கள் பொட்டலமாக வைத்திருந்தது மெத்தபெட்டமைன் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கேரள மாநிலம், பாலக்காடை சேர்ந்த முகமது அஷ்ரத் என்பவருடன் சேர்ந்து மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.