Sunday, June 30, 2024
Home » டிரோன் மூலம் போலீஸ் கள்ளச்சாராய வேட்டை: 8,000 லிட்டர் சாராயத்துடன் 154 பேர் கைது

டிரோன் மூலம் போலீஸ் கள்ளச்சாராய வேட்டை: 8,000 லிட்டர் சாராயத்துடன் 154 பேர் கைது

by Mahaprabhu

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி சாராய வேட்டைகளை காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். விலைமதிப்பற்ற மனித உயிர்களை காவு வாங்கிய கள்ளக்குறிச்சியில் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவுக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் உத்தரவுப்படி நேற்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கள்ளச்சாரயத்திற்கு எதிரான அதிரடி வேட்டையில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கள்ளச்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என வட மாவட்டங்களில் கள்ளச்சாரய மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை சாராய வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவலின்படி மலைகள் மற்றும் காடுகள், ஆற்றங்கரையோர பூதர்களில் காய்ச்சப்படும் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழுவதும் நடத்தப்பட்ட கள்ளச்சாராய ரெய்டில் 2400 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டதுடன், 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 2வது நாளாக நேற்று அதிகாலை எஸ்பி மணிவண்ணன் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என சட்டம் ஒழுங்கு, கலால் பிரிவு போலீசார் ஒருங்கிணைந்து 20 குழுக்களாக பிரிந்து பேரணாம்பட்டு சாத்கர் மலை மற்றும் பேரணாம்பட்டு, குடியாத்தம் வனப்பகுதிகளிலும், அணைக்கட்டு அல்லேரி, பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, அத்தியூர், அப்புக்கல்மேடு ஒட்டிய மலைப்பகுதிகளிலும், பாலமதி மலைப்பகுதியிலும், அமிர்தி கானமலை வனப்பகுதியிலும் கள்ளச்சாராய வேட்டையில் இறங்கியுள்ளனர். குறிப்பாக பேரணாம்பட்டு வட்டாரத்தில் எஸ்பி தலைமையில் களம் இறங்கிய போலீசார் இரண்டு டிரோன் கேமராக்கள் உதவியுடன் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 943 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 6 ஆயிரத்து 700 லிட்டர்ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது. 39 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பனையாகும் டாஸ்மாக் மதுபாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு (கலால்) டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட மொத்தம் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 680 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜவ்வாதுமலை பகுதியில் நடந்த சோதனையில், பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1300 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் மாத கடப்பா மலை, ஜவ்வாது மலை, புதூர் நாடு, நாயக்கனேரி மலை, ஏலகிரி மலை, உள்ளிட்ட மலைப்பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்றதாக 28 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 300 லிட்டர் சாராயம், வெளி மாநில மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் எஸ்பி கிரண்ஸ்ருதி தலைமையிலான போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் காவேரிப்பாக்கத்தில் பட்டம்மா சாவடி பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்றுக்கொண்டிருந்த கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த கிச்சிளி(எ)வெங்கடேசன் (51) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களில் சாராய ரெய்டில் மொத்தம் 7,800 லிட்டர் சாராயம், ஊறல்கள் அழிக்கப்பட்டது. பெண்கள் உட்பட 106 பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட 7 உட்கோட்டங்களில் தீவிர சாராய வேட்டை நடத்தி, கடந்த இரண்டு நாட்களில் 204 லிட்டர் சாராயம், 500க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தி சாராயம் விற்று வெள்ளை ராஜா, சிவக்குமார், சரவணன், அஞ்சலை, அம்சா ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் போலீசார் நடத்திய சோதனையில், கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்மனாரை கிராமத்தில் சாராயம் காய்ச்சிய ராமன் (46) என்பவரும், கூடலூர் நியூஹோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியசோலை பகுதியில் சாராயம் காய்ச்சிய ஜோஸ் (55), எல்லமலை பகுதியை சேர்ந்த ஜோசப் (61) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நாகை மற்றும் புதுக்கோட்டையில் நடத்தப்பட்ட சோதனையில் 540 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. நாகையில் 16 பேரும், புதுக்கோட்டையில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi