நெல்லை: நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தைகளுடன் ராஜபாளையம் செல்ல வேண்டியிருந்தது. கணவர் வெளியூர் சென்றதால் ஆக்டிங் டிரைவரை தெரிந்த நபரிடம் கூறி அழைத்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்ததும், தனது செல்போனை எங்கோ வைத்துவிட்டு தேடிய பெண், போன் பண்ணுமாறு அந்த டிரைவரிடம் கேட்டுள்ளார். அவரும் போன் செய்ய ரிங் டோனை கேட்டு அவர் போனை எடுக்கச் சென்றபோது ஆக்டிங் டிரைவர் பின்னாலேயே சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அந்த டிரைவரை மிரட்டி வாக்குவாதம் செய்தார்.
தொடர்ந்து டிரைவர் அவரிடம் அநாகரிகமாக நடக்க முயலவே வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து அந்த பெண் மிரட்டியதாகவும், பின்னர் தோழி மற்றும் கணவருக்கு போன் செய்ததாகவும் இதையடுத்து அந்த டிரைவர் அங்கிருந்து சென்றதாகவும் கூறி தனது தோழியின் கணவரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் இருந்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் தரப்படவில்லை. இருப்பினும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.