குடிநீர், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணத்தை 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: குடிநீர், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக சனிக்கிழமைகளிலும் வசூல் மையங்கள் இயங்கும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரிகளையும், கட்டணங்களையும் இந்த மாதம் 30ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும்.
சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை காசோலை மற்றும் வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகையினை https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். இ-சேவை மையங்கள் மற்றும் யூபிஐ, கியூஆர் கோடு, ஐபிஓஸ் போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, கட்டணங்களை செலுத்தலாம். எனவே, நுகர்வோர்கள் வரும் 30ம்தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னைக் குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி