மீண்டும் திராவிட மாடல் அரசு அமைக்க உறுதியேற்போம்: கலைஞர் 6ம் ஆண்டு நினைவு நாளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: கழகத்தலைவர் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: சொல்லாகவும் – செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள். மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர்.

கலைஞரின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது. அவரின் கொள்கை உறுதி, சமூக நீதி – மாநில சுயாட்சி – மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது. ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல்; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர். அவர் வழியில் உழைத்து, கழகத் தலைவர் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related posts

செப் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு