சென்னை: யூடியூப் சேனல் ஒன்றில் டாக்டர் காந்தராஜ் சினிமாத்துறை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. இதுகுறித்து விசாக கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி கடந்த வாரம் சென்னை பெருநகர காவல்துறையில் டாக்டர் காந்தராஜ் மீது புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், சைபர் க்ரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஓரிரு நாளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், விளக்கம் அளிக்காத பட்சத்தில் கைது செய்ய நேரிடும் என்றும் எச்சரித்து போலீசார் அவருக்கு சம்மனை வழங்கிவிட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.